இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி சமீபத்தில் இளம் இந்தியர்கள் வாரத்தில் 70 மணிநேரம் வேலை செய்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் குறைவாக இருப்பதாக ஒரு தவறான அனுமானம் முதலாளிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1980களில் தொடங்கி, பல ஆண்டுகளாக ஊதியங்களின் பங்கு ஏன் குறைந்துள்ளது; அதே நேரத்தில் முதலாளிகளின் லாபத்தின் பங்கு எப்படி அதிகளவு அதிகரித்துள்ளது என்பதற்கும், உழைப்புச் சுரண்டலுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு இழப்பு, தொழிலாளர் சட்டங்கள் திருத்தம், கொத்து கொத்தாக வெளியேற்றம் என தொடர் நடவடிக்கைகளை முதலாளிகள் எடுத்து வருகின்றனர். ஆனால் அதே வேளையில் ஆலைகளில் உற்பத்தி குறையவில்லை.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழிலாளர் மேலாண்மை நிறுவனமான க்ரோனோஸ் இன்கார்பரேட்டட், உலகிலேயே மிகவும் கடினமாக உழைக்கும் ஊழியர்களில் இந்தியர்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. மறுபுறம், சர்வதேச மின்வணிக தளமான Picodi.com, உலகளவில் மாத சராசரி ஊதியத்தின் அடிப்படையில் இந்தியா மிகக் குறைந்த தரவரிசையில் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. எனவே, நாராயண மூர்த்தியின் கூற்று, பொய்களால் அலங்கரிக்கப்பட்டது. ஒரு தவறான கதையை உருவாக்குவதன் மூலம் தொழிலாளர்களுக்கு பாதகமான தொழிலாளர் சீர்திருத்தங்களைத் திணிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இது தெரிகிறது.
கடந்த முப்பது ஆண்டுகளாக நவீன தாராளமயமாக்கல் கொள்கை நடைமுறையில் உள்ளது, இது வளரும் நாடுகளை பொருளாதார ரீதியாகவும் அதன் மூலம் சமூக ரீதியாகவும் மிகவும் படு பாதாளத்திற்கு தள்ளியுள்ளது, தாராளமயமாக்கல் கொள்கைகள் பணக்கார நாடுகளுக்கே உதவின. பன்னாட்டு கார்ப்பரேட்டுகள், உலக வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் தங்கள் பேரரசுகளை உருவாக்கின. முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் உலக வர்த்தக அமைப்பின் உடன்படிக்கையின் மூலம் வளரும் நாடுகளை சுரண்டுவது நவீன காலனித்துவ முறை. ஆனால், பணக்கார நாடு என்று அழைக்கப்படும் அமெரிக்கா ஏன் நெருக்கடியில் சிக்கியது? அப்படியெனில் அமெரிக்கா உட்பட பணக்கார நாடுகளில் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறைந்துவிட்டது என்று புரிந்து கொள்ள வேண்டியதா?
சுவாரஸ்யமாக, மேற்படி நாராயண மூர்த்தி அவர்கள், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சஜ்ஜன் ஜிண்டால் அவர்களின் கருத்தை தனக்கு சாதகமாகக் குறிப்பிடுகிறார். சீனர்கள் எஃகு உற்பத்தி செய்து 40% குறைந்த விலையில் விற்கும் அதே வேளையில், இந்தத் துறையில் உள்ள இந்திய தொழில்முனைவோர் மற்றும் உலோகத் துறையினர், சுரங்கம் மற்றும் உருக்கு போன்ற பெரு நிறுவன உற்பத்தியாளர்கள், உற்பத்தியில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதற்கும் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் அல்லது வேலை நேரம் எவ்வாறு பொறுப்பாக முடியும்?
முறையான உற்பத்தித் துறையில் கூட, உழைப்பு மிகுந்த நுண்-சிறு-நடுத்தர தொழில்கள் (MSME) அதிக அளவில் இருப்பதைக் காணலாம். இந்த நிறுவனங்களில் ஊதியக் குறைப்பு மூலம் செலவைக் குறைக்கும் செயல்முறை இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. பெரிய அளவிலான பெருநிறுவனங்கள் இந்தியாவிலும் உலக அளவிலும் இந்த சிறிய அலகுகளுக்கு உற்பத்தியை அவுட்சோர்சிங் மற்றும் துணை ஒப்பந்தத்தில் வழங்குவது கண்டறியப்பட்டுள்ளது. ஐடி துறையிலும் இதுவே உண்மை. இது, தொழிலாளர் மீதான சுரண்டலின் நவீன வடிவமே.
வேலை நேரம் அதிகரிக்கும் நாடுகளில் மனிதவளக் குறியீட்டு அளவு குறைந்து வருகிறது. வேலை நேரம் குறைந்த நாடுகளில் மனித வளக் குறியீடு அதிகரித்துள்ளது என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சமூக உறவு மேம்பாடு, வாழ்க்கை தரம், பாலின சமத்துவம், சமூக பங்களிப்பு என உயர்ந்துள்ளது.
வேலை நேரத்தை உயர்த்துவது என்பது முதலாளித்துவத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். இதன் மூலம் கொள்ளை லாபம் அடையவும் மேலும் மேலும் தொழிலாளர்களை சுரண்டவும் முதலாளித்துவம் திட்டமிட்டுக் கொண்டே இருக்கும். தொழிலாளி வர்க்கம் அதை நிச்சயம் தடுத்து நிறுத்தும்.